ரமலான் நோன்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
பொருளடக்கம் |
[தொகு] ரமலான் மாதம்
ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் இந்த மாதத்தில் அல்லாஹுவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும் எனவும் கூறினார்கள்.
வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.
இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். ஆக சடங்காக இல்லாமல் வணக்கம் என்ற எண்ணத்தில் செய்யவதாகும். அதாவது நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது, (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2: 183)
அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான் இறையச்சமாகும். அதன் உரிய தோற்றத்தை நோன்பு கொடுக்கின்றது.
ஒரு முஸ்லிம் நோன்பாளி, யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவராக இருந்தும் தன்னிடத்திலுள்ள உணவை உண்ணமாட்டார், தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிக்க மாட்டார், இச்சை இருந்தும் அதை நிறைவேற்ற மாட்டார். இதற்கெல்லாம் காரணம் தான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நம்புவதினால்தான்.
நோன்பைத்தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே, அது (நோன்பு) எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும், எனக்காகவே விட்டுவிடுகின்றான் என்று இறைவன் கூறுவதாக நபி (ஸல்) நவின்றார்கள். (ஆதார நுற்கள்: புகாரி, முஸ்லிம்)
எல்லா வணக்கங்களும் அல்லாஹுவுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான், அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்தி சொல்வதற்கு காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், மனத்தூய்மையுடனும் நோற்கப் படுவதினால்தான்.
பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளை கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கிறாரோ அதில் எந்தவித பலனும் இல்லை என்பதை பின்வரும் நபிமொழி விளக்குகிறது.
யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம்: புகாரி)
பொதுவாக, ரமலான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய மாதமாகும். தொழாத முஸ்லிம்கள் தொழ ஆரம்பித்து விடுகிறார்கள், தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கிறார்கள், உம்ரா செய்யாதவர்கள் உம்ரா செய்கின்றார்கள், குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்து விடுகிறார்கள், தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றார்கள். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு.
[தொகு] நோன்பின் கடமைகள்
1. பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
2. முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
3. பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
4. சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5. பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6. கற்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப்பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7. மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
8. "தீ" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.
[தொகு] நோன்பை முறிக்கும் செயல்கள்
1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.
2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.
5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.
[தொகு] நோன்பின் அனுமதிகள்
1. நோன்பின்போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்வற்றிற்கு அனுமதியுள்ளது.
2. காயங்கள், சிறுமூக்கு உடைதல், பல்பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.
3. நோன்பு நாட்களின் பகல்பொழுதில் பல் துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.
4. குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. அதற்கு அடுத்து வரும் சுப்ஹு தொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.
5. கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக்கொள்வதோ, குளிர் சாதனங்களை உடல்மீது பயன்படுத்துவதிலோ, பகல் மற்றும் மாலைபொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.
6. நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக்கொண்டு பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போது சாப்பிட்டு கொண்டால் போதுமானது.
7. வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டைவரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
8. நேரம் தெரியாமல் சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து, ஃபஜ்ர் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டு விட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
9. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோ விட்டால் நோன்பு முறியாது. ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்திகொள்ள வேண்டும்.
[தொகு] நோன்பின் ஒழுங்குகள்
1. ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
2. பேரித்தம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3. ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்துவிட்டது என தெரிந்தும் விடிஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
4. ஹலால் என்னும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும்.
5. நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
6. ரமலான் கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ள வேண்டும்.
7. பெருநாள் தொழுகைக்கு முன்பு ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.