கடம்பர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கடம்பர்கள் | |
---|---|
முதலாம் நன்னன் | கி. மு. 300 - 260 |
கூந்தலம் வனவாசிக் கடம்பன் | கி. மு. 260 - 232 |
திரிலோசனக் கடம்பன் | கி. மு. 190 - 165 |
கடம்பின் பெருவாயில் | கி. பி. 46 - 80 |
நார்முடிச் சேரல் காலத்துக் கடம்பன் | கி. பி. 80 - 110 |
செங்குட்டுவன் காலத்துக் கடம்பன் | கி. பி. 110 - 135 |
இளம்சேரல் இரும்பொறைக் காலத்துக் கடம்பன் | கி. பி. 135 - 155 |
மயூரவர்மன் | கி. பி. 350 - 375 |
சந்திரகாந்தன் | கி. பி. 375 - 400 |
பக்ரதவர்மன் | கி. பி. 400 - 425 |
ரகுகாகுத்தவர்மன் | கி. பி. 425 - 450 |
முதலாம் சாந்திவர்மன் கிருஷ்ணன் | கி. பி. 450 - 475 |
மாந்தத்ரிவர்மன் - மிருகேச வர்மன் | கி. பி. 475 - 500 |
தேவவர்மன் - விஷ்ணு - சிவரதன் - பானு - இரவி வர்மன் | கி. பி. 500 - 535 |
குமாரன் - சிம்மன் - அரிவர்மன் | கி. பி. 535 - 570 |
மாந்தாதன் - கிருஷ்ணன் 2, அரசவர்மன் | கி. பி. 570 - 585 |
கோவா கடம்பன் ஜயகேசின் 2 | கி. பி. 1090 - 1120 |
மகாமண்டலேசுர கடம்பன் | கி. பி. 1181 - 1258 |
கடைசிக் கடம்பன் (பெயர் தகவல் இல்லை) | கி. பி. 1300 - 1336 |
கடம்பர் கடம்பு மரத்தைச் சின்னமாகக்கொண்டு கடற்கொள்ளையில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவிருந்த துளு நாட்டில் கடம்பரின் ஆட்சி கி. மு. 300 முதல் கி. பி. 1336 வரை 1636 ஆண்டுகள் நடைபெற்று வந்தன. இவர்கள் தலைமைத் தாயகமாக வனவாசி பன்னிராயிரமாகும் மேலும் கடற்கரையோரப் பகுதியாகிய கொண்கானம் தொளாயிரமும் மூலத்தாயகமாக கொண்கானக் கடற்கரையும் விளங்கியது. கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன. கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு). கடம்பர் நாடாக மங்கலாபுரம் (மங்களூர்) விளங்கியது. துளு நாட்டில் அமைந்திருந்த மங்களூர்த் துறைமுகம் இன்று தென் கன்னடப் பகுதியைச் சார்ந்த பிரதேசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பூழி மற்றும் மங்கலாபுரம் போன்ற பகுதிகள் சில காலம் இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்தது. கார்வார் முனை முதல் நேத்திராவதி ஆற்று முகத்துவாரம் (மங்களூர் - மங்கலாபுரம்) வரை அமையப்பெற்றிருந்த கடற்கரைக்கு கடற் கடம்பு எனப் பெயரிடப்பட்டிருந்து இக்கடற்கரைக்குப் பக்கத்தில் உள்ள தீவுகளில் கடம்பர்கள் ஆட்சி செலுத்தினர். மேற்கு நாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் கடற் கடம்பர் என குறிக்கப்பட்டுள்ளனர்.