இளநீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இளநீர் தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். எனினும், இளந்தேங்காயையும் குறிக்கும். இளந்தேங்காய் மட்டை உரிக்கும் முன் பச்சை நிறத்தில் காணப்படும். சில வகைத் தென்னைமரங்களில் காவிநிறத்தில் காய்கள் காய்க்கும். அவை செவ்விளநீர் எனப்படுகின்றன. புறமட்டையை உரிக்காமல் மட்டையோடு உள்ள இளந்தேங்காயின் நுனியைச் சீவி உள்ளிருக்கும் நீரை உறிஞ்சிக் குடிப்பர். தேங்காய் முற்றாமல் இளசாய் இருப்பதால் அரிவாள் முதலியவற்றால் சீவ இயலும். நீரைப் பருகியவுடன், இளநீர்த் தேங்காயைப் பிளந்து முற்றாது இருக்கும் இளகிய பருப்பை உண்பர். இந்த முற்றாத இளகிய பருப்புக்கு வழுக்கை என்று பெயர்.
இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளநீர் நன்கு முற்றி காய்ந்தவுடன் அதிலிருந்து தேங்காய் எடுக்கப்படுகிறது. காய்ந்த இளநீருக்கு நெற்று என்று பெயர்.