பார்த்தினன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பழங்கால கிரீஸின் தப்பியுள்ள கட்டிடங்களில் மிகவும் பிரபலமானதும், உலகின் மிகவும் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றுமான பார்த்தினன்(கன்னி ஆதெனா கோயில்), ஏதென்ஸின் அக்ரோபோலிஸில் கிட்டத்தட்ட 2,500 வருடங்களாக நிற்கின்றது. பாரசீகப் போர்களின்போது, கிரீசையும், ஏதென்ஸையும் பாதுகாத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நகரத்தின் காவல் தெய்வமான ஆதனாவுக்காகக் கட்டப்பட்டது இக் கோயில். இது பாரசீகர்களால் அழிக்கப்பட்ட பழைய கோயிலொன்றுக்குப் பதிலாகக் கட்டப்பட்டது. ஒரு கோயிலாக இருந்த அதே நேரம், ஒரு treasury யாகவும் பயன்பட்டது. பிற்காலத்தில் ஏதெனியப் பேரரசாக வளர்ந்த டெலியன் லீக் இனுடைய treasury யாகவும் இது இருந்தது.
[தொகு] வடிவமைப்பும், கட்டுமானமும்
பார்த்தினன், 5 ஆம் நூற்றாண்டின் முன்னணி ஏதேனிய அரசியல்வாதியாகிய பெரிக்கிள்ஸ் என்பவனின் முன்முயற்சியினால் கட்டப்பட்டது. கட்டட வேலைகள் பிடியாஸ் என்னும் சிற்பியின் பொதுவான மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன. இவரே சிற்ப அலங்காரங்களுக்கும் பொறுப்பாக இருந்தார். இக்தினோஸ் என்பவரும், கலிக்கிறேட்டஸ் என்பவரும் கட்டிடக்கலைஞர்களாகப் பணியாற்றினர். கி.மு 447ல் தொடங்கிய கட்டிட வேலைகள் கி.மு 438ல் பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டது எனினும், அலங்கரிப்பு வேலைகள் கி.மு 433 வரை யாவது தொடர்ந்து நடைபெற்றன. இக் கட்டிடவேலைகளுக்கான கணக்கு விபரங்கள் சில கிடைத்துள்ளன. இவற்றின்படி, 16 கிமீ தொலைவிலிருந்த பெண்டெலிக்கஸ் மலையிலிருந்து அக்ரோபோலிஸுக்குக் கற்களை எடுத்துவந்த செலவே தனித்த பெரிய செலவாகக் காணப்படுகின்றது.
அண்மையிலிருக்கும் ஹெப்பீஸ்தஸ் கோயில், டொறிக் ஒழுங்கிலமைந்த, தப்பியிருக்கும் கட்டிடங்களில் கூடிய முழுமைநிலையில் காணப்பட்டாலும், பார்த்தினனே அதன் காலத்து டொறிக் கட்டிடங்களில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஜோன் ஜூலியஸ் நோர்விச் என்பார் பின்வருமாறு எழுதினார்:
" இக் கோவில், எக்காலத்திலும் கட்டப்பட்ட டொறிக் கோயில்கள் எல்லாவற்றிலும் மிகவும் முழுமை பெற்றது என்ற பெருமையைப் பெற்றுள்ளது.