மதுபானி ஓவியப் பாணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மதுபானி ஓவியப் பாணி அல்லது மிதிலா ஓவியப் பாணி என்பது, இந்தியாவின், பீஹார் பகுதியில் நடைமுறையில் உள்ள ஒரு ஓவியப் பாணி ஆகும்.
[தொகு] தோற்றம்
மதுபானி ஓவியப் பாணி மிகவும் பழமையானது. இதன் தோற்றம் பற்றித் தெரியவில்லை. மரபுவழிக் கதைகள் இதை, இராமாயண காலத்துடன் தொடர்பு படுத்துகின்றன. ஜனகரின் மகளான சீதையின், திருமணத்துக்காக, ஒவியர்களை ஜனகர் அமர்த்தியதாக அவை கூறுகின்றன.
மதுபானி ஓவியங்கள், மிதிலாவில் உள்ள மதுபானி என்னும் தற்கால நகரை அண்டி அமைந்துள்ள ஊர்களில் பெண்களாலேயே வரையப்பட்டு வந்தது. மரபு முறையில், இவ்வோவியங்கள் புதிதாக மெழுகப்பட்ட மண் சுவர்களிலேயே வரையப்பட்டன. தற்காலத்தில், துணி, [கடதாசி], கன்வாஸ் போன்றவற்றிலும் வரையப்படுகின்றன. இந்த ஓவியப்பாணி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் அடங்கி இருப்பதனாலும், இதன் நுணுக்கங்கள், தலைமுறைகள் ஊடாகக் குடும்பங்களுக்கு உள்ளேயே இருந்து வருவதனாலும், இப்பாணி அதிகம் மாற்றம் அடையாமலேயே உள்ளது. மதுபானி ஓவியங்களில் தாவரங்களில் இருந்து பெறப்படும் நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
மதுபானி ஓவியங்கள் இயற்கை மற்றும் தொன்மங்கள் சார்ந்த நிகழ்வுகளை அடைப்படையாகக் கொண்டு வரையப் படுகின்றன. ஓவியங்களுக்குரிய கருப்பொருள்கள் பெரும்பாலும், இந்துக் கடவுளரான, [[கண்ணன்], இராமன், சிவன், துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி போன்றவர்களைக் குறிப்பதாகவே பெரிதும் காணப்படுகின்றன. இயற்கைப் பொருட்களான ஞாயிறு, மதி போன்றவையும், துளசிச் செடி போன்ற மதத் தொடர்பு கொண்ட செடிகளும் இவ்வகை ஓவியங்களில் கருப்பொருளாக அமைந்திருப்பதைக் காண முடியும். இவற்றைவிட அரசவைக் காட்சிகள், திருமணம் போன்ற சமூக நிகழ்வுகள் என்பனவும் மதுபானி ஓவியங்களில் இடம்பெறுகின்றன.