வாசிலி காண்டின்ஸ்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாசிலி காண்டின்ஸ்கி (Wassily Kandinsky) (16 டிசம்பர் 1866 - 13 டிசம்பர் 1944) என்பவர் ஒரு ரஷ்ய ஓவியரும், படம் அச்சிடுபவரும், கோட்பாட்டாளரும் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகப் புகழ் பெற்ற ஓவியர்களுள் ஒருவர். புதுக்காலத்தின் முதலாவது பண்புரு (abstract) ஓவியத்தை வரைந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
காண்டின்ஸ்கி, ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பிறந்தார் எனினும் இவரது இளமைக் காலம் ஒடெஸ்ஸா என்னும் இடத்திலேயே கழிந்தது. இவர் மாஸ்கோப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, சட்டம், பொருளியல் ஆகிய பாடங்களைக் கற்றார். இவர் தனது தொழிலில் ஓரளவு வெற்றிகரமாகவே திகழ்ந்தார். டார்பட் பல்கலைக் கழகத்தில் இவருக்குப் பேராசிரியர் பதவியும் கிடைத்தது. ஆனால், இவர் தனது 30 ஆவது வயதில் ஓவிய ஆராய்ச்சியில் இறங்கினார்.
1896 ஆம் ஆண்டில் இவர் மியூனிச்சில் தங்கி அங்குள்ள மியூனிச் அழகியற் கலை அக்கடமியில் கற்றார். ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் 1918 ஆம் ஆண்டில் மீண்டும் மாஸ்கோவுக்குச் சென்றார். ஆட்சியாளரின் அதிகாரபூர்வக் கலைக் கோட்பாடுகளோடு இவருக்கு முரண்பாடு ஏற்பட்டதால் இவர் 1921 ஆம் ஆண்டில் ஜெர்மனிக்குத் திரும்பிச் சென்றார். அங்கே புகழ் பெற்ற பௌஹவுசில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1922 ஆம் ஆண்டிலிருந்து நாஸிகளால் 1933 இல் அது மூடப்படும்வரை அவரது பணி அங்கே தொடர்ந்தது. பின்னர் அவர் அங்கிருந்து பிரான்சுக்குச் சென்றார். 1933 ஆம் ஆண்டில் அந் நாட்டின் குடியுரிமையும் பெற்றார். தனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அங்கேயே கழித்த காண்டின்ஸ்கி, நெயுல்லி-செர்-செயின் (Neuilly-sur-Seine) என்னுமிடத்தில் 1944 ஆம் ஆண்டு காலமானார்.
[தொகு] கலைசார் காலகட்டங்கள்
காண்டின்ஸ்கியின் தூய பண்புரு ஆக்கங்கள் திடீரென வந்துவிடவில்லை. அவரது தனிப்பட்ட கலை அநுபவங்களின் அடிப்படையில் அமைந்த கோட்பாட்டுச் சிந்தனைகளின் முதிர்ச்சியினாலும், நீண்ட கால வளர்ச்சியின் அடிப்படையினாலுமே இவை உருவாகின. இந்த உள் அழகின் மீதான பக்தியை அவர், ஆன்மாவின் உள்ளுணர்வு என்று குறிப்பிட்டார்.
காண்டின்ஸ்கி, இளமைக்காலத்தில் மாஸ்கோவில் இருந்தபோது பல விடயங்களைக் கற்றறிந்தார். சிறுவனாக இருந்தபோது, நிறங்கள் தொடர்பில் வழமைக்கு மாறாகத் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் நினைவு படுத்திக் கொள்வதுண்டு. அவரது வளர்ச்சியோடு, நிறங்கள் குறித்த ஈர்ப்பும் வளர்ந்துகொண்டே இருந்தது. எனினும், ஓவியம் கற்றுக்கொள்வதற்கு அவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. 1889 ஆம் ஆண்டில், இனவரைவியல் ஆய்வுக்குழு ஒன்றின் உறுப்பினராக மாஸ்கோவின் வட பகுதியில் உள்ள வொலொக்டா (Vologda) என்னும் பகுதிக்குச் சென்றார். இப்பயணம் பற்றி விவரித்தபோது ஓரிடத்தில், வீடுகள், தேவாலயங்கள் முதலியவற்றில் காணப்பட்ட ஒளி பொருந்திய நிறங்களாலான அழகூட்டல்கள், அவற்றின் உள்ளே நுழையும்போது ஓவியமொன்றுக்குள் நுழையும் உணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.