அகத்திணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலத் தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன.
இன்று நமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்குகின்றது.
[தொகு] அகத்திணைப் பிரிவுகள்
தொல்காப்பியம் அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது. இவை,
- கைக்கிளைத் திணை
- குறிஞ்சித் திணை
- பாலைத் திணை
- முல்லைத் திணை
- மருதத் திணை
- நெய்தல் திணை
- பெருந்திணை
என்பனவாகும். இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம். இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்.