பூகம்ப அளவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நில அதிர்வுகள் ரிக்டர் அளவை என்ற அளவினால் அளக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் நூற்றுக்கணக்கில் நில அதிர்வுகள் ஏற்படுவதாக நிலநடுக்கமானிகள் மூலம் அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் மிகச் சிறிய அதிர்வுகளாக இருப்பதால் நம்மால் அறிய முடிவதில்லை.
நில அதிர்வுகளை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிலநடுக்கவியல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்படும் போது பல்வேறு நிலையங்களில் பதிவான அளவுகளைக் கொண்டு அந்த பூகம்பத்தின் புவி அதிர்ச்சி வெளிமையம் (epicenter) எங்கு உள்ளது என்பதையும், பூகம்பத்தின் அளவையும் கணிப்பார்கள். பூமிக்குள் எந்த இடத்தில் பாறைப் படிமங்களின் உரசல் ஏற்பட்டதால் பூகம்பம் உண்டானதோ அது குவியம் (Focus) எனப்படும். அந்த இடத்திற்கு நேராக மேலே உள்ள பூமியின் மேற்பரப்பு புவி அதிர்ச்சி வெளிமையம் என்று அழைக்கப்படும்.
ஒரு பூகம்பத்தின் குவியம் தரையிலிருந்து 70 கி.மீ. ஆழத்திற்குள் இருந்தால் அதனை ஆழமற்ற குவியம்(Shallow focus) என்பார்கள். இதனால் பூமியின் பரப்பில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். 70 கி.மீ.க்கு மேல் 700 கி.மீ ஆழத்திற்குள் பூகம்பம் உருவானால் ஆழமான குவியம் (Deep focus) என்று கருதப்படும்.
[தொகு] பூகம்ப மையத்தை கண்டுபிடித்தல்
குறைந்தது மூன்று நிலநடுக்கவியல் நிலையங்களில் பதிவான தகவல்களைக் கொண்டு பூகம்ப மையம் கண்டுபிடிக்கப்படும். கணிப்பின் துல்லியம் புவி அதிர்ச்சி வெளிமையத்திற்கு 10கி.மீ. அளவிற்குள்ளும், பூமியின் அடியில் உள்ள குவியம் 10 - 20 கி.மீ அளவிற்குள்ளும் அறியப்படுகிறது.
பூகம்பங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பு நிலநடுக்கவியல் நிலையங்களால் பூகம்ப மையத்தை மேலும் துல்லியமாக கணிக்க இயலும்.