நேரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமாக கருத்துக்கள் உள்ளன. நேரம், அண்டத்தின் அடிப்படையான கூறு, அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதிலே நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன, இதை அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் கொண்டிருந்த இயல்பிய (realist) நோக்கு ஆகும்.
இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம், புத்தி சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே மனிதர்கள், நிகழ்வுகளைத் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள், நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைவெளியையும் அளந்து கொள்கிறார்கள், பொருள்களின் இயக்கங்களை ஒப்பீடு செய்கிறார்கள் என்கிறார்கள் இக்கருத்தின் ஆதரவாளர்கள். மேலும் இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல. கோட்பிரைட் லீப்னிஸ் (Gottfried Leibniz), இம்மானுவேல் கண்ட் (Immanuel Kant) போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர்.
அறிவியலில், வெளியுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் அலகுகளின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகளாக, சூரியனின் இயக்கம், சந்திரன் தேய்ந்து வளர்தல், ஊசல்களின் (pendulum) இயக்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.