இம்மானுவேல் கண்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இம்மானுவேல் கண்ட் (22 ஏப்ரல் 1724 – 12 பெப்ரவரி 1804) என்பவர் ஒரு ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவியலாளர் ஆவார். இவர் கிழக்குப் பிரஷ்யாவின், கோனிக்ஸ்பர்க் (இன்றைய ரஷ்யாவிலுள்ள கலினின்கிராட்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். நவீன ஐரோப்பாவின், செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார்.
[தொகு] வரலாறு
எமானுவேல் (Emanuel) என்னும் பெயரில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட இவர் ஹீப்ரூ மொழியைக் கற்ற பின்னர் தனது பெயரை இம்மானுவேல் (Immanuel) என மாற்றிக்கொண்டார். இவரது பெற்றோர்களுக்கு ஒன்பது பிள்ளைகளில் நான்காவதாக 1724 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தனது முழு வாழ்க்கைக் காலத்தையும், அவருடைய சொந்த நகரமும், அக்காலக் கிழக்குப் பிரஷ்யாவின் தலைநகரமுமான கொனிக்ஸ்பர்க்கிலும் அதை அண்டிய பகுதிகளிலுமே கழித்தார். இவருடைய தந்தையார் ஜொஹான் ஜார்ஜ் கண்ட் (Johann Georg Kant) ஜெர்மனியின் வட கோடியில் அமைந்திருந்த மெமெல் என்னும் இடத்தைச் சேர்ந்தஒரு கைப்பணியாளர். இவரது குடும்பம் கடுமையான மதப் பற்றுக் கொண்டது. இவர் கற்ற கல்வி, கண்டிப்பான, ஒழுக்கம் சார்ந்தது, கணிதம், அறிவியல் என்பவற்றுக்கும் மேலாக இலத்தீன், சமயக் கல்வி என்பவற்றுக்கே கூடுதல் அழுத்தம் கொடுத்தது.
[தொகு] இளமைக்காலம்
கண்ட், 1740 ஆம் ஆண்டில், தனது 16 ஆவது வயதில், கொனிக்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே, ஒரு பகுத்தறிவுவாதியான மார்ட்டின் நட்சென் என்பவரின் கீழ், லீப்னிஸ், வோல்ஃப் ஆகியோருடைய தத்துவங்களைக் கற்றார். பிரித்தானியத் தத்துவவியலினதும், அறிவியலினதும் வளர்ச்சி குறித்தும் அறிந்திருந்த மார்ட்டின், நியூட்டனுடைய கணிதம் சார்ந்த இயற்பியலை காண்ட்டுக்கு அறிமுகப்படுத்தினார். 1746 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே இவரது கல்வியும் தடைப்பட்டது. கோனிக்ஸ்பர்க்கைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களில் இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்து வந்தார். அத்துடன் தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார். இவரது முதலாவது தத்துவ நூல் (Thoughts on the True Estimation of Living Forces) 1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் பல அறிவியல் தலைப்புக்களில் மேலும் பல நூல்களை வெளியிட்ட அவர், 1755 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஆனார். அறிவையல் தொடர்பாகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஓரளவு எழுதி வந்தாராயினும், அக்காலத்தில் இருந்து, காண்ட் கூடுதலாகத் தத்துவம் சார்ந்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். தொடராகப் பல முக்கிய ஆக்கங்களை அவர் இக்காலத்தில் வெளியிட்டார்.