வெண்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்
- திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.
- நள வெண்பா1 மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
- நீதி வெண்பா2 மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
[தொகு] வகைகள்
[தொகு] தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர்.
அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல. நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.
வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது.
- நேர்நேர் - தேமா
- நிரைநேர் - புளிமா
- நேர்நிரை - கூவிளம்
- நிரைநிரை - கருவிளம்
- நேர்நேர்நேர் - தேமாங்காய்
- நேர்நேர்நிரை - தேமாங்கனி
- நேர்நிரைநேர் - கூவிளங்காய்
- நேர்நிரைநிரை - கூவிளங்கனி
- நிரைநேர்நேர் - புளிமாங்காய்
- நிரைநேர்நிரை - புளிமாங்கனி
- நிரைநிரைநேர் - கருவிளங்காய்
- நிரைநிரைநிரை - கருவிளங்கனி
அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.
[தொகு] வெண்பாவிற்கான யாப்பிலக்கணம்
யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது[1]. அந்நெறிமுறைகள் பின்வருவன:
- சீர்களுக்கான நெறிகள்
- வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
- மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.
- நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்
- வெண்பாவிற்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
- இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
- வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்பா செப்பலோசை பெற்று வரும்.
வெண்பாவிற்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:
<வெண்பா> → <அடி>{1 - 11} <ஈற்றடி>
<அடி> → <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
<ஈற்றடி> → <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
<சீர்> → <ஈரசை> | <மூவசை>
<ஈற்றுச்சீர்> → <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
<ஈரசை> → <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
<மூவசை> → <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>
<தேமா> → <நேர்> <நேர்>
<புளிமா> → <நிரை> <நேர்>
<கருவிளம்> → <நிரை> <நிரை>
<கூவிளம்> → <நேர்> <நிரை>
<தேமாங்காய்> → <தேமா> <நேர்>
<புளிமாங்காய்> → <புளிமா> <நேர்>
<கருவிளங்காய்> → <கருவிளம்> <நேர்>
<கூவிளங்காய்> → <கூவிளம்> <நேர்>
<நாள்> → <நேர்>
<மலர்> → <நிரை>
<காசு> → <நேர்> <நேர்>
<பிறப்பு> → <நிரை> <நேர்>
<நேர்> → <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
<நிரை> → <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
<குறில்> → {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நெடில்> → {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<ஒற்று> → {மெய்யெழுத்து}
1. {1-11} என்பது இடம் சாரா இலக்கணங்களை எழுத உதவும் பேக்கஸ்-நார் முறையில்
இல்லாவிட்டாலும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெர்ள் நிரலாக்க மொழிக்(Perl) குறியீடாகும். அதன்
பொருள் ஒன்றிலிருந்து பதினொரு முறை வரை வரலாம் என்பதாகும்.
2. மேற்கானும் இ.சா.இ.யில் சில இலக்கண உருவகங்களைக் (productions) குறைக்க முடியுமென்றாலும் தமிழ்மொழி யாப்பிலக்கணத்திற்கு
இணையாக இருக்கும் பொருட்டு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
தளைகளுக்கான இலக்கண நெறிகள்:
இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)
<வெண்பா> → <X> | <Y>
<X> → <தேமா> <Y>
<X> → <கூவிளம்> <X>
<Y> → <புளிமா> <Y>
<Y> → <கருவிளம்> <X>
<X> → <நாள்> | <காசு>
<Y> → <மலர்> | <பிறப்பு>
வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
<X> → <தேமாங்காய்> <X>
<X> → <கூவிளங்காய்> <X>
<Y> → <புளிமாங்காய்> <X>
<Y> → <கருவிளங்காய்> <X>
[தொகு] எடுத்துக்காட்டு
ஒரு திருக்குறள்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு:
"As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay. (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly)."
