Wikipedia:இம்மாத பயனர் தெரிவுக் கட்டுரைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலக்கியம் - பத்துப்பாட்டு | பண்பாடு - யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் |
சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அடங்குகின்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை, வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. | யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. |
வரலாறு - களப்பிரர் | அறிவியல் - அனைத்துலக முறை அலகுகள் |
களப்பிரர் தென் இந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறைக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியுமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சி காலமும், இவர்களது கால தமிழ்ப்படைப்புக்களும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதானால் இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. |
![]() அனைத்துலக முறை அலகுகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய குறும்புத்தக்த்தின் அட்டைப்படம்
அனைத்துலக முறை அலகுகள் (International System of Units) (பிரென்ச்சு மொழிப் பெயரின் சுருக்கெழுத்து SI) என்பன எடை, நீளம் போன்ற பல்வேறு பண்புகளை அளக்கப் பயன்படும் தரம் செய்யப்பட்ட அலகுகளாகும். இம் முறை அலகுகளைக் குறிக்க பயன்படும் SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய Système International d'Unités என்பதனைக் குறிக்கும். இவ்வலகுகள் உலகெங்கிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஓரளவுக்குப் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல்-விற்றல் போன்றவைகளுக்கும் பயன்படுகின்றன. |
கணிதம் - பை | புவியியல் - இந்தியப் பெருங்கடல் |
பை (π) என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்று. ஒரு வட்டத்தின் சுற்றளவு (பரிதி), அதன் விட்டத்தைப்போல பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். இதற்கு கி.பி.400-500 ஆண்டுகளில் வாழ்ந்த இந்திய அறிஞர் ஆரியபட்டா அவர்கள் கணக்கிட்ட அளவு அண்மைக்காலம் வரையிலும் மிகத் துல்லியமானது. இன்றோ பையின் (π ) அளவை ஒரு டிரில்லியன் பதின்ம (தசம) எண்களுக்கும் மேலாக, மாபெரும் வல்லமை படைத்த கணினிகளைக் கொண்டு கணித்து இருக்கிறார்கள். என்றாலும் பையின் பதின்ம எண் வரிசையிலே, எண்கள் எந்த முறையிலும் மீண்டும் மீண்டும் வாராமல் இருப்பது எதிர்பார்க்கப்பட்டது எனினும் ஒரு வியப்பான செய்தி. இந்த பையின் பதின்ம(தசம) எண்கள் வரிசையில் முடிவேதும் இல்லை. இவ்வகை எண்கள் முடிவிலா துல்லியவகையைச் சேர்ந்த சிறப்பு எண்கள். இதனை வேர்கொளா சிறப்பு எண்கள் (transcendental number) என அழைக்கப்படும். |
இந்தியப் பெருங்கடல், உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியான இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் தெற்காசியா; மேற்கில் அரேபியத் தீவக்குறை மற்றும் ஆப்பிரிக்கா; கிழக்கில் மலாய் தீவக்குறை, சுண்டா தீவுகள், மற்றும் ஆஸ்திரேலியா; தெற்கில் அன்டார்டிக் பெருங்கடல் ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கை தீவு அழைக்கப்படுகின்றது. இக்கடல் அகுல்ஹஸ் முனையிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் அட்லான்டிக் பெருங்கடலிலிருந்தும், 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் பெசிபிக் பெருங்கடலிலிருந்தும் பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக பாரசீக வளைகுடாவிலுள்ள 30° வடக்கு அட்ச ரேகையாகும். அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். |
சமூகம் - இரக்கமற்ற பணியாளன் உவமை | தொழில்நுட்பம் - அலைக்கம்பம் |
இரக்கம்ற்ற பணியாளன் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமாணக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் லூக்கா17:3-4 இலும் மத்தேயு18:21-35 இலும் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடரான பேதுரு இயேசுவிடம் தன் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் தனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டப்போது பதிலாக கூறிய உவமையாகும். இது பாவ மன்னிப்பு பற்றியது
|
அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் துணையுடன் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் இடையே நிகழும் உருமாற்றத்துக்கு அலைக்கம்பம் உதவுகின்றது. அலைக்கம்பம் தொலைதொடர்பு சாதனங்கள் (சமிக்கை செலுத்திகள், சமிக்கை பெறுவிகள்), ராடர், வழிகாட்டிகள், வானலை வானியல் சாதனங்கள் போன்ற பல உபகரணங்களில் பயன்படுகின்றது. |
நபர்கள் - அரவிந்தர் | இம்மாத படிமம் |
அரவிந்தர் வட இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார். கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா என்போரின் மகன். ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார். 1879 இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார். தாமரையும் குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். பெப்ரவரி 1893 இல் இந்தியா மீண்டார். அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார். |